சிவகாமி அம்மன்



நெஞ்சமதில் நிறைந்த அன்னை

ஞ்சமதில் அமர்ந்து வந்தாள்

தஞ்சமென நாடி வந்தேன்

தாயே சரணம் என்றேன்

நஞ்சுண்ட கண்டனின் நாயகி
நதி சடை கொண்ட பூரணி
அஞ்சுதல் அழிக்க வந்தாள்
ஆறுதல் கொடுக்க வந்தாள்

விஞ்சிடும் அவள் அழகில்
வியந்து நானும் நின்றிருந்தேன்
வஞ்சியவள் அழகை நானும்
வர்ணிக்க வார்த்தை இல்லை

மஞ்சள் நிறத்தவளைக் கண்டேன்
மதியொளி முகத்தவளை தொழுதேன்
வஞ்சகம் சூழ் உலகில்
வந்தெனை காத்திடு என்றேன்

குஞ்சர முகத்தோன் வந்தான்
குறையாத அருளைத் தந்தான்
கொஞ்சிடும் இணையர் அருகிருக்க
குமரனும் காட்சி தந்தான்

நெஞ்சமதில் நிறைந்த அன்னை
மஞ்சமதில் அமர்ந்து வந்தாள்
தஞ்சமென நாடி வந்தேன்
தாயே சரணம் என்றேன்

Comments