மறக்குமா யாழ்ப்பாண புட்டு
பீசாவில் என்ன சுவை கண்டீர்
காசில்லாதவன் புசிக்கும் புட்டே உயர்வென்பேன்
பேசும் பொருளானதின்று பேஸ்புக்கில்
நாசாவும் இறங்கிவிடும் நாளை ஆராய்ச்சியில்
உரலில் இடித்த சம்பலை தாழித்து பின்
குழலில் அவித்த புட்டோடு புசிக்கலாம்
இரவில் ஏதும் மிச்சம் இருந்தால்
பகலில் பழங்கறியோடு உண்ணலாம்
மதியம் சமைத்த ஆட்டிறைச்சி
அதையும் இரவில் சூடாக்கி
சதையும் எலும்பும் மிச்சம் விடாமல்
இதிலும் இறுதியில் புட்டே வெல்லும்
நண்டுக்கறியோடு புட்டு உண்டால்
ஒன்றிரண்டு தட்டு இறங்கும்
கணவாய் கறியோடு உண்டால்
ஒருவாயும் மிச்சம் இராது
அவித்த வெள்ளை மாப்புட்டோடு
வதக்கலில் உருளைக்கிழங்கு போதும்
பிரட்டலில் கத்தரிக்காய் போதும்
பொரித்தலில் மோர்மிளகாய் சுண்டங்காய்
நாலு வகை கறி எதுக்கு
நன்று பழுத்த வாழைப்பழம் போதும்
நான்கு துண்டு மாம்பழமும் போதும்
நாவில் எச்சிலூறும் பலாச்சுளை போதும்
வேறு என்ன சொல்வேன்
யார் வந்து கேட்டாலும்
புட்டு புட்டு உன் திருவாயால்
கட்டு கட்டு ஒரு கட்டு கட்டு
ஏதோ என்னுடைய பங்குக்கு என்னால முடிஞ்சது
#இணுவை_நித்தியதாஸ்_2020

Comments
Post a Comment