நவீன சரஸ்வதி சபதம்


வென்றால் போதுமென்று வெற்று வாக்குறுதி வழங்கிவிட்டு  

வென்ற பின்னே எதுவும் செய்யாமல்

கண்டபடி எல்லாம் விலை ஏற்றியவனை 

கண்டால் வரச்சொல்லுங்கோ

சகலதும் விலை சகலகலாவல்லியே! 1


நாடும் கடன் சுமை பொருள் விலை

நோய்நொடி துன்பம் 

மேடும் பள்ளமும்தான் வாழ்க்கை என்பர்

நாடே பள்ளத்தில் வீழ்ந்து கிடக்கு 

சூடும் சுரணையும் இல்லா

கேடு கெட்டவர் ஆட்சியில் 

வாடும் மக்களுக்கு மீள என்ன வழி

சகலதும் விலை சகலகலாவல்லியே! 2 


அழிக்கும் ஆயுதங்கள் கொத்துக்குண்டுகள் தாண்டி

வழிக்கு வழி எம் உறவுகள் மடிவது கண்டு கனத்து

குழிக்குள் பயந்து ஒழித்து வாழ்ந்து மீண்டு வந்தால்

பழிக்குத் தான் வாழ்க்கையா என்றே எண்ணத்தோன்றுது

சகலதும் விலை சகலகலாவல்லியே! 3 


தூக்கும் பல்லக்கில் அவர்கள் வாழ்க்கை வகை வகையாய் உணவுகள் 

வாக்கு வங்கியை நிரப்பியோரின் 

வயிறு நிரப்ப என்ன வழி

சாக்குப் போக்கு சொல்லி பேக்காட்டுவதும் எதுக்காக 

நாக்கு வறண்டு உயிர் போக வேண்டாமே 

சகலதும் விலை சகலகலாவல்லியே! 4


பஞ்சத்தில் மக்கள் பரிதவிக்க பஞ்சுமெத்தையில் அவர்கள் உறக்கம்

நெஞ்சம் கனத்து வெடிக்கிறது விலைவாசி கேட்டுக் கேட்டு 

கெஞ்சி மன்றாடிக் கும்பிட்டு கேட்கின்றோம்

கஞ்சியாவது குடிப்போம் அரிசி விலை குறைத்தால்

சகலதும் விலை சகலகலாவல்லியே! 5


மண்ணும் மலை வளம் கடல் வளம் எல்லாம் விற்று விட்டு

கண்ணும் கருத்துமாய் பார்த்த விவசாயத்திலும் கை வைத்தார் 

இன்னும் என்னென்ன செய்வாரோ ஈழக்குடிகளுக்கு

உண்ணும் உணவிலும் கை வைத்தால் என் செய்வோம்

சகலதும் விலை சகலகலாவல்லியே! 6 


வீட்டுக்குள் இருந்து வாழும் வாழ்க்கைக்கு பழகிவிட்டோம் 

வேட்டுச் சத்தங்களும் கேட்டு கேட்டு பழகிவிட்டோம்

கொட்டும் மழையும் கொழுத்தும் வெயிலும் தாங்க பழகிக்கொண்டோம் 

கூட்டும் பொருள் விலைதனை எப்படி தாங்குவோம்

சகலதும் விலை சகலகலாவல்லியே! 7 


சொல்லாமல் செய்பவர் எல்லாம் பெரியார் என்பார்களே

சொல்லாததெல்லாம் செய்பவரை என்னவென்று சொல்வது

நல்ல வளங்களை இல்லாமல் செய்பவரை என்னவென்று சொல்ல

மெல்ல மெல்ல சிறுக சேமித்து கல் வீடு கட்டவென்றால் சகலதும் விலை சகலகலாவல்லியே! 8


தொற்றும் நோய்களுடன் இசைந்து வாழப்பழகிவிட்டோம் 

கற்பனை கனவுகள் எல்லாம் குழிதோண்டி புதைத்துவிட்டோம் 

பற்பசையிலிருந்து பற்பொடிக்கு மாறிவிட்டோம்

விற்கும் பொருட்களின் விலை இனி குறையாதா

சகலதும் விலை சகலகலாவல்லியே! 9 


மண்கொண்ட வளங்கள் எல்லாம் கண்முன்னே பறிபோகுது

முன்கண்ட பொருட்கள் எல்லாம்

இனி காணக் கிடைக்காதா

புண்பட்ட மனங்களை ஆற்ற வழிஏதும் கிடைக்காதோ 

கண்கண்ட தெய்வமே கண் திறந்து பாராயோ

சகலதும் விலை சகலகலாவல்லியே! 10

Comments